அசத்தும் அன்னம் உணவகம்“பேபி அக்கா கடை என்றால் வளசரவாக்கம், பிரகாசம் சாலையில் அவ்வளவு பிரபலம். ‘அன்புடன் அன்னம்’ என்றால் வீட்டு செய்முறையில் தனித்த ருசியில் செய்து தருகின்றார்கள். ஐந்து வருசத்துக்கு முன்னாடி என் மகன் சொல்லி தான் இந்த கடையைத் தொடங்கினேன். அம்மா நீ ரொம்பா நல்லா சமைக்குற. நாம ஏன் ஒரு வீட்டு சாப்பாட்டு மெஸ் ஆரம்பிக்க கூடாதுனு சொல்லி அவனே ஆர்வமா உணவகத்துக்கு பெயர் வைக்கறது என்ன ரெசிபி தரலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டான். சைவம், அசைவம் இரண்டுமே சமைச்சு தறோம். ஹோட்டல் ஆரம்பிச்ச புதுசுல ஆறு மாசத்துக்கு கஸ்டமர் யாருமே வரலை. ஒரு நாள் மாறும்னு தொடர்ந்து அதிக சிரத்தையோட உணவகத்தை நடத்தினோம். ஒரு கட்டத்துல வேண்டாமா என்று யோசித்தோம். அப்போது எங்கள் ஏரியாவில் தங்கியிருக்கும் பேச்சிலர் பிள்ளைகள், அசிஸ்டன்ட் டைரக்டர்களும் சிலர், என்னிடம் வந்து, ‘மெஸ்சை மூடிறாதீங்க அக்கா, இங்கு சாப்பாடு நல்லா இருக்கு. எங்கள் வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கு. எங்க வீட்ல சாப்பிடற மாதிரி இருக்குனு’ சொன்னாங்க. லாபம் இல்லைனாலும் பரவாயில்லை. நம்மளை நம்பி வந்து சாப்பிடும் ஒரு சிலருக்காவது நடத்தலாம்னு முடிவு செய்தோம். இப்போ தினமும் இருநூறு பேர் சாப்பிட்டுவிட்டு போறாங்க. சமையலில் ஸ்பெஷலாக எதையும் நான் கற்றுக் கொண்டு வரவில்லை. எங்கள் வீட்டிற்கு எப்படி செய்வேனோ அப்படிதான் உணவகத்துக்கும் சமைக்கிறேன். வாடிக்கையா சாப்பிடும் கஸ்டமர்களின் ஆரோக்கியம் முக்கியம். அதனால செயற்கை பொருட்கள், நிறங்கள்னு எதுவும் சேர்க்க மாட்டேன். ஆரம்பத்தில் மூன்று வேளையும் டிபன் மீல்ஸ்னு கொடுத்துட்டு இருந்தோம். கொரோனாவுக்கு பிறகு காலையில் டிபன் தருவதை நிறுத்திவிட்டோம். இப்போ மதியமும் இரவும் செய்து தந்துட்டு இருக்கோம்.சைவம், அசைவம் இரண்டுமே ஒரே விலை தான் 70 ரூபாய். சைவத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு பொரியல், கூட்டு அப்பளம் இருக்கும். அசைவ சாப்பாடு என்றால், சாதம் மீன் குழம்பு, ஒரு பொரியல் இருக்கும். இதைத்தவிர, வேறு எதுவும் கேட்டா செய்து தருவோம். சிக்கன் 65, சிக்கன் குழம்பு, மீன் வறுவல் இருக்கும். அதே போல இரவில், சப்பாத்தி குருமா, இட்லி தோசை வகைகள் இருக்கும். எங்கள் உணவகத்தில் தொன்னை பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். ஆரம்பத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் செய்து தந்துட்டு இருந்தோம். இப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை. அதனால் வாரத்தில் 2 நாட்கள் புதன், சனிக்கிழமையில் தொன்னை பிரியாணி தயார் செய்கிறோம். இந்த பிரியாணியை சீரகசம்பா அரிசியில்தான் தயாரிக்கிறோம். பாரம் பரிய முறைப்படி செய்து தறோம். சீரக சம்பா அரிசியில் எந்த உணவு செய்து சாப்பிட்டாலும் சீக்கிரமே செரிமானம் ஆகிடும். அதிக காரம் இருக்காது. விறகு அடுப்புல செய்து சுட சுட மந்தாரை இலையில சாப்பிடவோ பார்சல் கேட்டா மடிச்சு தறோம். அதோட சுவையே ரொம்ப நல்லா இருக்கும்” என்கிறார். தொகுப்பு : குமரேசன்சீரகச் சம்பா தொன்னை பிரியாணிதேவை:சிக்கன் – அரை கிலோசீரக சம்பா அரிசி – அரை கிலோ எண்ணெய் – தேவைக்கேற்பநெய் – 2 மேசைக்கரண்டிவெங்காயம் – 1தயிர் – கால் கப்அரைத்த தக்காளி விழுது – அரை கப் தனியாத்தூள் – அரை தேக்கரண்டிகரம் மசாலா – அரை தேக்கரண்டிமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டிகஸ்தூரி மேத்தி – 1 தேக்கரண்டிஉப்பு – தேவைக்கேற்பஎலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டிதண்ணீர் – 4 கப்பட்டை- 2லவங்கம் – 4அரைக்க: வெங்காயம் – 2 நறுக்கியதுபுதினா, கொத்துமல்லி இலை – 1 கைப்பிடிபச்சை மிளகாய் – 4-6பூண்டு பல் – 25இஞ்சி – 2 துண்டுமிளகு -1 தேக்கரண்டிபட்டை- 2லவங்கம்- 4ஏலங்காய்- 3உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: சுத்தம் செய்த சிக்கனில் தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர், குக்கரில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கரம் மசாலாவைச் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். மேலும் அதில் சிக்கன் சேர்த்து அனைத்து பொருட் களையும் நன்கு வதக்க வேண்டும். 15 நிமிடம் குறைந்த தீயில் வைக்க வேண்டும். பின்னர், அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதற்கிடையில் அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து வைத்துவிட வேண்டும். இப்போது, ஊற வைத்த அரிசி,தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் இட்டு ஒரு விசில் விட்டு இறக்கிவிட வேண்டும். இப்போது சுவையான பிரியாணி தயார். இதனை தொன்னை வைத்து பரிமாறவும்….
The post வீட்டுச் செய்முறையில் தொன்னை பிரியாணி appeared first on Dinakaran.